புதன், 20 அக்டோபர், 2010

படித்ததில் பிடித்தது

1. வாழ்க்கை நமக்கு எப்போதுமே சாதகமாய் இருப்பதில்லை. இருந்தாலும் கூட அது மிக அழகானது.

2. குழப்பத்தில் தயங்கும் போது, நின்று விடாதீர்கள். மெல்ல அடுத்த அடியை எடுத்து வையுங்கள்.

3. பிறர் மீது வன்மம் வளர்த்துக் கொண்டு, அதற்காக காலம் விரயம் செய்யுமளவுக்கு மிகுதியான நேரம், நம் சின்ன வாழ்க்கையில் இல்லை.

4. உடல் நலிவுறும் போது, உங்கள் அலுவலகமோ, வாடிக்கையாளர்களோ அதிகம் உதவ முன்வர மாட்டார்கள். அந்த சமயங்களில் ஆதுரமாய்க் கரம் நீட்டுபவர்கள், நம் குடும்பத்தினரும், நண்பர்களுமே! அவர்களோடு எப்போதும் தொடர்பிலேயே இருங்கள்.

5. கிரெடிட் கார்டு பில்களை மாதாமாதம் கட்டிவிடவும்.

6. எல்லா விவாதங்களிலும், நீங்களே வெற்றி கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை. உடன்பாடின்மைக்கும் உடன்படுங்கள்

7. அழவேண்டியிருப்பின், யாருடனாவதோ அல்லது யார் தோளிலோ சாய்ந்து அழவும். தனிமையில் குமைவதை விட அது ஆறுதல் தரும்.

8. கடவுளிடம் கோபித்துக் கொள்ள வேண்டியிருந்தால், தயங்காமல் அவரைக் கோபித்துக் கொள்ளவும். அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்.

9. முதல் சம்பளத்திலிருந்தே பணி ஓய்வினை கருத்தில் கொண்டு சேமிக்கவும்.

10. சுய கட்டுப்பாடு தேவை தான். ஆனால், சாக்லேட் என்றால்.. அது கொஞ்சம் கஷ்டம் தான்.. பரவாயில்லை.

11. உங்கள் கடந்த காலத்துடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்.. அது நிகழ் காலத்திற்கு குடைச்சல் தராமல் சுலபமாக்கும்.

12. நீங்கள் கண்ணீர் உகுப்பதை உங்கள் பிள்ளைகள் பார்க்க நேர்ந்தால்.... சரி விடுங்கள்.. பரவாயில்லை.. மூக்கை சீந்திக் கொள்ளுங்கள்.

13. பிறருடன் நம் வாழ்க்கையை எப்போதும் ஒப்பீடு செய்யாதீர்கள். அவர்கள் வாழ்க்கைப் பயணத்தில் என்னென்ன பிரச்னைகளோ? அவையெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

14. ஏதேனும் ஓர் உறவு இரகசியமாக இருக்க வேண்டும் என்றால், அந்த உறவில் நீங்கள் இருக்கக் கூடாது!

15. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே தலைக்கீழாய் மாறக் கூடும். ஆனாலும் பதட்டப் படாதீர்கள். கடவுள் கண் இமைப்பதில்லை.

16. ஆழ்ந்து மூச்சை உள்ளிழுக்கவும். அது மனதை அமைதிப் படுத்தும். உள்ளிழுத்த மூச்சை அவசியம் வெளியே விட்டு விடவும்.

17. உபயோகமற்றவை, நேர்த்தியில்லாதவை, மகிழ்ச்சி தராதவை-இவைகளை தவிர்த்து விடுங்கள்

18. உங்கள் உயிரை மாயக்காத எந்த நிகழ்வும், உங்களை பலப் படுத்தவே வந்தவை என்று உணருங்கள்

19. மகிழ்ச்சி ததும்பும் குழந்தைப் பருவத்திற்கு, உங்களுக்கு இன்னும் கூட அவகாசம் இருக்கிறது. இன்னொருமுறை, குழந்தையாய் மாறித்தான் பாருங்களேன்! ஆனால் ஒன்று! இந்த இரண்டாவது குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு.

20. உங்களுக்குப் பிரியமானதை நீங்கள் பின்தொடரும் பட்சத்தில், இல்லை, கிடையாது, முடியாது போன்ற மறுப்புகளை பதிலாக ஏற்றுக் கொள்ளாதீர்கள்

21. அழகான மெழுகு வர்த்திகளை ஏற்றுங்கள்: புது விரிப்புகளை இடுங்கள்: பளிச்சென நல்ல ஆடைகளை உடுத்துங்கள். இவற்றையெல்லாம் ஏதேனும் விசேஷ தருணத்திற்காக பத்திரப் படுத்த வேண்டாம். அந்த இனிய நாள் இன்று தான்.!

22. கவனமாய் எல்லாவற்றிற்கும் முன்னேற்பாடுகள் செய்து கொள்ளுங்கள். ஆனாலும், போகிற போக்கில் செல்லுங்கள்.

23. கிறுக்குத்தனத்தை இப்போதே வெளிப்படுத்திக் கொள்ளலாம். முதுமை வரையில் அதற்கென காத்திருக்க வேண்டாம்.

24. உங்கள் உடம்பின் அதிமுக்கியமான செக்ஸ் உறுப்பு உங்கள் மூளை தாங்க!

25. உங்கள் மகிழ்ச்சிக்கு வேறு யாரும் பொறுப்பல்ல. நீங்கள் தான் பொறுப்பு.

26. பெரும் பிரச்சினை என நீங்கள் கருதும் நிகழ்வின் போது நீங்கள் காணவேண்டிய விடை இந்த ஒரு கேள்விக்குத்தான்... ஐந்து வருடம் கழித்தும் இதன் தாக்கம் இருக்குமா?. பதில் இல்லை எனில் மேட்டர் ஜுஜுபி.

27. வாழ்க்கையின் கணங்களை தேர்ந்தெடுங்கள்..எப்போதும்.

28. அனைவரையும்,அனைத்தையும்... மனதார மன்னித்து விடுங்கள்.

29. மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது உங்கள் பிரச்சினை அல்ல.

30. காலம் அத்தனை காயங்களையும் ஆற்றிவிடும். காலத்திற்கு கொஞ்சம் சந்தர்ப்பம் கொடுங்கள்.

31. நல்லதோ கெட்டதோ, எந்த சந்தர்ப்ப சூழலும் கண்டிப்பாய் மாறியே தீரும்.

32. உங்களை நீங்களே சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.ஏனெனில், யாருமே உங்களை அப்படி எடுத்துக் கொள்வதில்லையே!

33. அற்புத, அம்மானுஷ்ய நிகழ்ச்சிகளில் கொஞ்சம் நம்பிக்கை வைப்பதில் தவறே இல்லை.

34. நீங்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கேற்ப கடவுள் உங்களிடம் கருணை செய்வதில்லை. அவர் கடவுளாய் இருப்பதாலேயே கருணையைப் பொழிகிறார். அதற்கு நாம் பாத்திரமாக வேண்டாமா?

35. வாழ்க்கையை தணிக்கை செய்துகொண்டிருக்க வேண்டாம். நில்லுங்கள் இந்த நிமிடத்தில்.. இந்த கணத்தில் வாழுங்களேன்.

36. வயது ஏறிக்கொண்டே போவது சந்தோஷமே.. இல்லையெனில் அதற்கு மாற்றாக, சின்ன வயசில் மண்டையை அல்லவா போட வேண்டி இருக்கும்?!

37. உங்கள் குழந்தைகளுக்கு வாய்த்திருப்பதென்னவோ ஒரே ஒரு குழந்தைப் பருவம் மட்டுமே. அவர்களைக் குழந்தைகளாய் இருக்க அனுமதியுங்கள்.

38. எல்லாமும் முடிந்த பிறகு, எஞ்சியிருப்பது, நீங்கள் செலுத்திய அன்பு மட்டுமே.

39. தினமும் வெளியே வந்து தான் பாருங்களேன். அதிசயங்கள் முக்குக்கு முக்கு காத்திருக்கிறது.

40. நாம் எல்லோரும் நம் பிரச்சினையை ஓரிடத்தில் குவித்துவிட்டு, நம் விருப்பப்படி அந்தக் குவியலிலிருந்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க விட்டால், நாம் அதிலிட்ட நமது பிரச்சினையையே மீண்டும் தேர்ந்தெடுப்போம்.

41. பொறாமை என்பது காலவிரயம். நம்மிடம் தான் அது ஏற்கெனவே நிறைய ஸ்டாக் இருக்கிறதே! போதும் போதும் இன்னமும் வேண்டாம்.

42. மிகச் சிறந்தது இனிமேல் தான் ஏற்பட வேண்டும்.

43. நீங்கள் எவ்வளவு தான் மோசமான மனநிலையில் இருந்தாலும் சரி... எழுந்திருங்கள்.. கொஞ்சம் மேக்கப் போட்டு, நல்ல உடை உடுத்தி, கொஞ்சம் ஸீன் போடுங்கள். அப்புறம் பாருங்கள்.. தெளிந்து விடுவீர்கள்.

44. வளைந்து கொடுங்கள்..விட்டுக் கொடுங்கள்

45. வாழ்க்கை ஒரு பரிசு.. அந்தப் பரிசின் சுகத்தை முழுக்க அனுபவியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக