செவ்வாய், 24 மே, 2011

மனம் மகிழுங்கள் - 41 : குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு

நாம் என்ன செய்தாலும் அதில் மகிழ்வடைகிறோமா; மனம் மகிழ்வடைகிறதா என்பது முக்கியம். அந்தச் செயல் தப்புச் செயலாய் இருக்கக்கூடாது என்பது அதைவிட முக்கியம். “ஜட்ஜய்யா! கொலை செய்வது மகிழ்வளித்தது; அதனால் கழுத்தை அறுத்தேன்” என்றால் நீதிபதி கழுத்திற்குத் தீர்ப்பு எழுதி விடுவார்.

ஒருவர் உத்தியோகம் செய்கிறார்; ஆனால் அதில் அவருக்கு அறவே விருப்பமில்லை; அவருக்குச் சம்பந்தமில்லாத வேலை. இன்னொருவர் - அவரது தகுதிக்கேற்ற ஊதியமில்லை; விருப்பத்திற்கேற்ப ஓய்வோ விடுமுறையோ கிடைப்பதில்லை. மனம் லயிக்கும் கலை, விளையாட்டு எதையும் கற்க இயலவில்லை; மனதிற்குப் பிடித்த காரியம் எதுவும் செய்ய முடியவில்லை; இல்லை... முடியவில்லை... என்று ஏகப்பட்ட ‘லை’ களுடன் ஒவ்வொருவருக்கும் தனிமை; மன அழுத்தம்; விரக்தி.

ஒருவர் இத்தகைய பரிதாபகர நிலைக்கு ஆட்பட்டுவிடுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

பட்டியல்!

அவர் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பட்டியல்!

அரசாங்கத்தின்மீது குறை; மனைவி மீது குறை; தம் குழந்தைகளின் மீது குறை; நாள் நட்சத்திரத்தின் மீது குறை; முதலாளி மீது குறை; பொருளாதாரம், தம் துரதிருஷ்டம், குறைவான கல்வித் தகுதி, மாமன், மச்சான், மாமனார் என்று குறை... குறை... கூடை நிறையக் குறை.


குறைகளில் நியாயம் இருக்கலாம்; அநியாயத்திற்கு அபத்தக் களஞ்சியமாக இருக்கலாம். அதன் அலசல் இங்கு கருப்பொருளன்று.

இந்தக் குறைகளெல்லாம் சேர்ந்து சேர்ந்து அவரது மனதில் ஒரு தீர்மானம் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம். ‘குறைகள் என் வாழ்க்கையில் வற்றாத ஊற்று என்றாகிவிட்டது. எனவே நான் வாழ்க்கையில் துயருற்றுக் கிடக்க எனக்குப் போதுமான நியாயம் இருக்கிறது...’ என்று விரக்தி! கன்னத்தில் கை!

தப்பு! இது பெரும் தப்பு! நமது எண்ணத்திற்கு ஏற்பவே வாழ்க்கை அமைகிறது. செயலுக்கு ஏற்பவே முடிவு அமைகிறது.

முழ நீளத்திற்கோ, சென்னையின் நூறடி ரோடு அகலத்திற்கோ உங்களிடம் குறைகளின் பட்டியல் இருக்கலாம். அவை வெற்று லிஸ்ட்! இணைய விரும்பும் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இருக்க, தன்னிஷ்டத்திற்குத் தயாரித்துக் கொள்ளும் வேட்பாளர் பட்டியல் போல் அது உபயோகமற்ற பட்டியல். நீங்கள் விரும்பியவாறு உங்களால் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இயலாவிட்டால், விரும்பிய செயல் புரிய இயலவிலலை என்றால், எத்தகைய சாக்குப்போக்குச் சொல்லியும் பயனில்லை.

ஏன்?

தலையைச் சுற்றிப் பாருங்கள்; அல்லது ஊரைச் சுற்றிப் பாருங்கள். நொடிதோறும் எத்தனை பேர் எத்தனை சவால்களை வென்று கொண்டிருக்கிறார்கள்?

கல்வித் தகுதி இல்லாதவர் கூடச் சாதனையின் விலாசத்தைச் சுமந்து கொண்டு திரிகிறார்.

‘உலகப் பொருளாதாரமே சுணங்கிக் கிடக்கிறதாம்; அதனால் நான் இன்று வேலைக்குப் போக மாட்டேன்’ என்றெல்லாம் மனைவியிடம் வம்பு பண்ணாமல் சிரமப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பவர் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ஏகப்பட்ட பிள்ளை குட்டிகளுடன் இருப்பவர் உற்சாகமாய் இருக்கிறார்;

மனைவியுடன் சண்டைக் கோழியாய் வாழ்ந்தவர் ஒரு சந்தர்ப்பத்தில் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு அணுதினமும் காதல் என்று இல்லறத்தை மகிழ்வாய் மாற்றிக் கொண்டுவிட்டார்.

தெருவுக்குத் தெரு இப்படி நிறைய உதாரணங்கள் காணலாம்.

இவர்களெல்லோரும் நமக்கு என்ன உணர்த்துகிறார்கள்? வாழ்க்கையில் அவர்கள் அவர்களுக்கான தேவைகளைச் சாதிக்க நினைத்தார்கள். அதைச் சாதிப்பது முக்கியம் என்று தங்களது மனவோட்டத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டார்கள். அதில் லயித்துச் செயல்பட்டார்கள். அவ்வளவுதான்!

சூழ்நிலைகளையும் மக்களையும் நாம் குறை சொல்லிக் கொண்டேயிருந்தால் நமது மனோபாவம் மாறிவிடும் அதற்கேற்ப நமது மன மகிழ்வின் விகிதாச்சாரம் நேரெதிராய் அமைந்துவிடும். எந்த அளவு குறையோ அந்த அளவிற்கு மன மகிழ்வு குறையும்.

நமக்கு வாழ்க்கை என்பது ஒரு முறையே. அந்த ஒரேயொரு வாய்ப்பில் ‘என்னால் ஏன் மன மகிழ்வுடன் இருக்க முடியவிலலை’ என்று குறைகளின் பட்டியலைப் பக்கம் பக்கமாய் எழுத ஆரம்பித்தால், விஷயம் ஒன்று மட்டுமே!

நீங்கள் மன மகிழ்வடைய முயலவில்லை.

அதையெல்லாம் ஓரமாய் ஒதுக்கிவிட்டு மகிழ்வுடன் வாழ்வதற்கான வழிவகைகளைத் தேடினால் போதும். உங்கள் மனம் தயாராகிவிடும். கொஞ்சம் முயன்று பாருங்கள். “அட! மனம் மகிழத் தயார்” என்பதை உணர்வீர்கள்.

Thanks to : www.inneram.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக