|
தவிர, நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை உண்டு. ஒவ்வொருமுறை ஏதோ காரணம் அமைந்திருந்தாலும் “இந்த முறை கணவன் தன்னை எப்படியும் முதல்முறையாக ப்ஃளைட்டில் ஏற்றி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப் போகிறான்,” என்று ஒரு நடுத்தரவர்க்க மனைவிக்கு நம்பிக்கை. “வரதட்சணையா? அதென்ன கற்கால வழக்கம்? பெண்ணை மட்டும் தாருங்கள்” என்று ஒரு ராஜகுமாரன் குதிரையிலோ, குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவிலோ வந்து நிற்கப் போகிறான், என்று பெண்ணைப் பெற்றவருக்கு நம்பிக்கை.
எதிர்மறையாய் வேறொரு வித நம்பிக்கையும் உண்டு.
மூட நம்பிக்கை!
தேர்விற்காக விடியவிடியப் படித்து, மாய்ந்து மாய்ந்து தயாராகி, தேர்வுத் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முழுகி, கடைசியில் கப்போர்டிலுள்ள பச்சைக் கலர் பேனாவைக் கண்ணில் ஒற்றி எடுத்துக் கொண்டு “தேர்வை இந்தப் பேனாவில் எழுதினால் நிச்சயம் நான் பாஸ்,” என்று சின்னப்ப தாஸுக்கு ஒரு நம்பிக்கை.
தேடித்தேடி விண்ணப்பித்து, ஆளைப்பிடித்து, கழுதைக் காலைப்பிடித்து ஒருவழியாய் அந்த மல்டிநேஷனல் கம்பெனியில் நேர்முகத் தேர்விற்கு அழைப்பிதழ் வர, படு டென்ஷனுடன் கிளம்பும் மகனிடம், “அந்த நீலநிறக் கர்சீப்பை மறக்காமல் பேண்டிற்குள் வைத்துக்கொள். உனக்கு நீலம்தான் ராசியான கலர்,” என்று மகனுக்கு அறிவுறுத்தும் அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை.
பூனை குறுக்கே ஓடினால், “ஆஹா! சகுனம் சரியில்லையே!”
கிளம்பும்போது “எங்கே போகிறீர்கள்?” என்று யாராவது கேட்டுவிட்டால், “போகும் காரியம் உருப்பட்டாற் போலத்தான்.”
காக்கை கத்தினால், "விருந்தாளிகள் வரப்போகிறார்கள் பார்" என்று நினைக்க, விருந்தாளிகள் வந்து சேருவார்கள். அடுத்த முறை ஊரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும்முன் மெயில், போன், எஸ்.எம்.எஸ்., என்று எதுவும் முயலாமல் நேரடியாய்ச் சென்று இறங்கி, திகைத்து நிற்பவரிடம் “என்ன காக்கை கத்தவில்லையா?” என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.
எது எப்படியோ, இப்படியான மூடநம்பிக்கைப் பட்டியல் நூறு பக்க நோட்டு அளவிற்கு நீளம்!
மனவியலாளர்கள் இதை மாற்றி வேறுவிதமாகச் சொல்கிறார்கள். உங்கள் மனம் எதை நினைக்கிறதோ – நல்லதோ கெட்டதோ - அதை அடைந்துவிடும் தன்மை கொண்டது!
“எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் தலைவலி வரும்” என்று நினைத்தால் அது உங்களைத் தவறாமல் வந்தடையும். “கூடுதலாய்க் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அது எனக்குத் தங்காது,” என்று நினைப்பவர்களுக்குப் பணம் ஏதும் உபரியாய்க் கிடைத்தாலே அது உடனே செலவாகிப் பர்ஸ் காலியாவது நிச்சயம் என்று தலையில் அடித்து “காட் ப்ராமிஸ்பா,” என்கிறார்கள்.
அமெரிக்காவில் கார்ல் சிமன்டண் (Dr. O. Carl Simonton) என்றொரு டாக்டர் இருந்தார். புற்றுநோய் மருத்துவர். தம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தார். ஒரே அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியில் இரு விதமான விளைவுகள் தென்பட்டன. “ஏன்?” என்று அவருக்குள் கேள்வி எழுந்து, அதை நுணுகி ஆராய்ந்தவர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தார். Positive attitude எனப்படும் ஆக்கபூர்வச் சிந்தனையுள்ளவர்களுக்கு மனம் சோர்வடைந்தவர்களைவிடக் குறைவான பக்க விளைவுகளே இருந்தன. “ஆஹா! மனதிற்கும் உடல்நலனிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது,” என்றவர், புற்றுநோயின் முற்றிய நிலையில் இருந்தவர்களுக்குக் கூட மருத்துவத்துடன் சேர்த்து மனப் பயிற்சி அளிக்கும்போது அவர்களது மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அவர்களது சொச்ச வாழ்நாளுக்கு உற்சாகத்தையும் மனக்கட்டுப்பாட்டுத் தரத்தையும் உயர்த்த முடியும் என்று ஆராய்ந்து நிரூபித்தார்.
தமது ஆராய்ச்சியில் டாக்டர் கார்ல் முக்கியமாய்த் தெரிவித்த தகவல், “நோயாளிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் குணமடையும் வேகம் அமையும்.” அதன் அடிப்படையில் அவர் மருத்துவச் சிகிச்சையும் மனவுறுதி ஆலோசனைகளையும் சேர்த்து அளிக்க ஆரம்பித்தார். சென்ற ஆண்டு இந்த டாக்டர் உணவு உண்ணும்போது புரையேறி இறந்து போனார் என்பது மட்டும் சோகமான உபரித்தகவல்.
வாழ்க்கையில் உங்களது மனம் எதை நம்புகிறதோ அதுவே உங்களுக்கு நிகழும். “என்னை யாரும் கண்டு கொள்வதில்லை; என்னிடம் சரியாகப் பழகுவதில்லை; என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள்,” என்பது உங்கள் மன நம்பிக்கையென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
“எல்லோருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது; என்னிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்,” என்று நம்புகிறவருக்கு அவர் வாழ்க்கையில் அவ்விதமே நிகழ்கிறது.
உங்கள் மனம் உங்களது கட்டுப்பாட்டில்! எதைச் சிந்தனை செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தாம் முடிவடுக்கிறீர்கள். உங்கள் மனதிற்குள் எதைத் திணிப்பது என்பதையும் நீங்கள்தாம் முடிவெடுத்து நிகழ்த்துகிறீர்கள்.
நல்லதை நம்பி மனதிற்குள் நல்ல எண்ணங்களையே திணித்தால் வாழ்க்கையில் அகமும் முகமும் மகிழ்வுடன் திகழும்.
னம் மகிழ, தொடருவோம்..
க
நாம் அனைவரும் அறிந்த கிரிக்கெட் விளையாட்டு உதாரணமொன்றைப் பார்ப்போம். சுழன்று வரும் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று உங்கள் மூளையிலுள்ள செல்கள் கட்டளையிடுகின்றன. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் போல் வருகிறது கட்டளை. உங்கள் உடல் அதற்கேற்ப அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. உங்கள் மனதிலுள்ளது நல்ல ப்ரோகிராம் என்றால் நீங்கள் நல்ல ஆட்டக்காரர். பந்து பவுண்டரி கோட்டைத் தொட்டிருக்கும். “என்னால் இந்த ஸ்பின்னையெல்லாம் தாங்க முடியாது”, என்று மனதில் கற்பனையிருந்தால் ஒன்றிரண்டு ஸ்டம்புகள் காலி! தினசரி இந்த விளையாட்டிற்கானப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும்போது, சந்தேகமேயின்றி உங்களின் திறமை மேம்படும். நிச்சயம் மேம்படும். ஆனால், உடல்ரீதியான பயிற்சி மட்டுமே போதும், என்று நீங்கள் நினைத்தால், “போதாது” என்கிறார்கள் மன ஆய்வாளர்கள்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காலம், வெளி (time, space) ஆகியனவற்றைப் பற்றிய தமது அறிவியல் தீர்மானத்திற்குத் தம்மை விண்ணைத் தாண்டிக் கற்பனை செய்து கொண்டார். கோளங்களுக்கு இடையே கற்பனையிலேயே பயணம் செய்தார். தம்மைக் குழந்தைபோல் பாவித்து அவர் செய்து கொண்ட கற்பனைகள்தாம் அவர் சிறந்த அறிவியலாளராக உருவாக உதவின.
கனவென்றால் பகல் கனவு, தூக்கத்தில் கானும் கனவு, வெட்டிக் கனவு அல்ல. ஆரோக்கியக் கனவு! வேறுவிதமாய்ச் சொல்வதென்றால் இலட்சியக் கனவு! கனவும் கற்பனையும் பின்னிப் பினைந்தவை.
க்ளாட் பிரிஸ்டல் (Claude Bristol) தன்னுடைய The Magic of Believing என்ற புத்தகத்தில், "உள்ளுணர்வு நம் வலிமைக்கு மூலம்" என்கிறார்.
இதற்கெல்லாம் என்ன செய்வது? என்ன வழி?
இணையம், ஐஃபோன் போன்ற சங்கதிகளெல்லாம் இல்லாத ஆதி காலத்தில் வானொலி என்றொரு பொருள் இருந்தது. பல்பொடி விளம்பரம், உங்கள் விருப்பம், செய்திகள் போன்றவை தவிர சிறுவர்களுக்கென்று ஞாயிறன்று நிகழ்ச்சி ஒன்றும் இருக்கும். சிறுவர்கள் மேல் அக்கறை தொலையாமல் இருந்த காலமாதலால் நல்லதொரு சைவ நிகழ்ச்சி. அதை நடத்தும் வானொலி அண்ணா என்பவர் “சிரிச்சு கிட்டே இருங்க, சந்தோஷமா இருங்க.” என்று நிகழ்ச்சியை முடிப்பார்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த என் நண்பரொருவர் -- மனுஷருக்கு நல்ல ஹாஸ்ய உணர்வு -- தமக்குப் பள்ளியில் நிகழ்ந்த அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்து கொண்டார். பத்தாம் வகுப்பில் அவர் படித்துக் கொண்டிருக்கும்போது, “இனி குற்றவாளிகள் யாரும் பொய் பேச முடியாது. தலையில் ஹெல்மட் மாதிரியான கருவியைப் பொருத்தி மின்னதிர்வுகளை தலைக்குள் செலுத்தினால் குற்றவாளிகள் கடகட என்று செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு உண்மையைக் கக்கிவிடுவர்” என்று அவருடைய வாத்தியார் கூறியிருக்கிறார். உடனே இவர் எழுந்து, “ஏன் சார்! குற்றவாளி ஊமையாக இருந்தால் என்ன செய்வார்கள்?” என்றிருக்கிறார். இவருடைய நண்பர்கள் உம்முனாம் மூஞ்சியர்களாக இருக்க வாய்ப்பே இல்லை.
அலுவலோ எதுவோ ஒரு வார காலத்திற்குப் பயணம் செல்லவேண்டியிருக்கிறது. அதற்கு ஒருவர் மூன்று பெட்டிகளில் துணிமணிகள், ஒரு பெரிய பெட்டி நிறைய சோப்பு, பேஸ்ட், பல் துலக்க ஒரு டஜன் ப்ரஷ், என்று எடுத்துக் கொண்டால் என்ன சொல்வோம்? குடும்ப சமேதராய் பயணமா என்றால் இல்லை.
உற்சாக சீலர் ஒருவரை அவரின் நண்பர் தொலைபேசியில் அழைத்தார். "எல்லாம் முடிந்தது; என் தொழிலில் போட்ட என்னுடைய பணம் அத்தனையும் காலி. நான் இப்போ போண்டி, திவால்."