திங்கள், 28 மார்ச், 2011

மனம் மகிழுங்கள் -36 - ஈடுபாடு

ஆங்கிலத்தில் commitment என்றொரு சொல் உண்டு. ஒரு செயலைப் பொறுப்பாய் மேற்கொள்ளுதல் என்று தமிழில் சொல்லலாம். வாழ்க்கையில் இது முக்கியம். எந்த செயல் புரிய முனைந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் பொறுப்பாய் நிறைவேற்றி முடிக்கும் மனோபாவம் வேண்டும். மனமிருந்தால் செய்வேன்; இல்லையெனில் 'என் வழி தனி வழி' என்றெல்லாம் ஒரு செயலில் இறங்கினால் அது இரண்டுங்கெட்டான் வழி.

ஈடுபாட்டுடன் செய்யப்படும் செயல்களே மன நிறைவளிக்கும்; மகிழ்வைத் தரும்.

திருமணம் புரிந்து கொள்கிறோம். எனக்கு மூடிருந்தால் கணவனுக்குரிய/மனைவிக்குரிய பொறுப்புகளை கவனிப்பேன்; மற்ற நேரத்தில் 'Please Do Not Disturb' என்று போர்டு மாட்டிக் கொள்ள முடியுமா? பிறகு குடும்பம் என்னாவது?

ஒருவர் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் - commit ஆகாமல் - தயங்கித் தயங்கி நின்றால் எந்தச் செயலையும் அவரால் சாதிக்க முடியாது. ‘செய்யலாமா வேண்டாமா’ என்ற மனோபாவத்துடனேயே இருந்து கொண்டிருந்தால் உலகம் அவரை ‘ஸீரியஸாக’ எடுத்துக் கொள்ளாது.

“இந்தக் காரியத்தில் நான் இறங்கப் போகிறேன்; என்ன ஆனாலும் சரி செய்து முடிக்கப் போகிறேன்” என்று களத்தில் இறங்கிப் பாருங்கள். அதன்பிறகு நடைபெறுவது மாயம். மனதில் ஏற்படும் திடமான அந்த உறுதிமொழி நீங்கள் மேற்கொள்ளும் காரியத்தில் உங்களை முழு மனதுடன் ஈடுபட வைக்கும். பின்னர் எதிர்படும் தடங்கல்கள், பிரச்சனைகள் போன்றவற்றையெல்லாம் மனம் எதிர்கொள்ளும் விதமே தனி.

ஏனெனில் -

“எப்படியும் இந்த ஒலிம்பிக்ஸில் நான் தங்கப்பதக்கம் வாங்கியே தீருவேன்” என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால், அதற்கடுத்து அவரது செயல்பாடுகளெல்லாம் அதற்கான முயற்சிகள், பயிற்சிகள் என்று அவ்ர் சுவாசிப்பது அந்தத் தீர்மானமாகவே ஆகிவிடுகிறது. அதையே, “இந்த முறை தங்கப்பதக்கம் வாங்க முயல்வேன்” என்று சொல்லிப் பாருங்கள். மனம் தோல்விக்குப் பாதித் தயார்!

இரண்டு வாக்கியங்களையும் உச்சரித்துப் பார்த்தால் மன அதிர்விலேயே வித்தியாசம் தெரியும்.

இவ்விதி, அலுவலாகட்டும் தொழிலாகட்டும் தாம்பத்யமாகட்டும் அனைத்திற்கும் பொது.

ஆக, எந்த ஒரு காரியத்திற்கும் அதைப் பொறுப்பாய் மேற்கொண்டு முடிக்கும் ஈடுபாடு அவசியம். அது இன்றிக் குடும்பம் இல்லை; தொழில் இல்லை; அரசாங்கம் இல்லை.

சரி! இது அமைந்துவிட்டால் எல்லாமே இன்ப மயமா?

பொறுப்பான ஈடுபாடு மட்டுமே வெற்றியை அளிக்கும்; காரியம் சித்தியடைய உதவும் என்று நம்பினால் தப்பு.

ஏன் அப்படி?

சோதனை என்பதைப் பற்றி ஒருமுறை பார்த்தோம். சோதனைகள் வாழ்க்கையின் அங்கம். இப்புவியானது நீரால், ஆக்ஸிஜனால் மட்டும் நிரம்பியிருக்கவில்லை. பிரச்சினைகளும் சோதனைகளும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் வியாபித்து நிறைந்திருப்பதே இப்புவி. அவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும்; கடக்க வேண்டும்.

மூச்சிரைக்க ஓடி எப்படியாவது வெற்றிக் கோட்டை நோக்கி மூக்கை நீட்டிவிட commitment எனப்படும் பொறுப்பான ஈடுபாடு இன்றியமையாதது. அப்படி இல்லையெனில் ‘ஆளை விடப்பா’ என்று தப்பித்து ஓடிவிடவே மனம் விரும்பும்.

எப்படியும் உடல் எடையைக் குறைத்தே தீருவது என்று முடிவெடுத்து ஈடுபாட்டுடன் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இருந்து கொண்டிருப்பீர்கள். “இன்னுமா டயட் முடியலை. இந்த ஒருமுறை மட்டும் சாப்பிடு; ஒன்றும் ஆகிவிடாது” என்று நண்பரொருவர் உங்களது நாசியருகே அசல் நெய்யில் செய்த பால்கோவாவைக் கொண்டுவந்து நீட்டுவார். மகா சோதனையான அந்தச் சில நிமிடங்களை நாக்கை, நாசியை, விரலை கண்ணை மூடிக்கொண்டு கடந்து விட்டீர்கள் என்றால் போதும். ஆனால் எப்போதும் வாழ்க்கையில் சோதனைகளும் பிரச்சினைகளும் இந்தளவு எளிமையாய் அமைவதில்லை.

கொசுறாய் ஒரு நல்லது நடக்கும். யதார்த்தத்தில் மக்களிடம் ஒரு குணம் உண்டு. மெச்சத் தகுந்ததை மெச்சுவது.

கடும் மனப் போரட்டத்திற்குப் பின் பால்கோவாவை நிராகரித்தீர்களில்லையா, அதைக் கண்டு அந்த நண்பர் உங்கள் மனவுறுதியை மெச்சத் தயங்கப் போவதில்லை. அதற்கு நேர்மாறாய் அவர் நடந்து கொண்டால் அவரது நட்பை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என்பது வேறு விஷயம்.

மனைவி தன் கணவனை நேரெதிரில் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். “சமைச்சு எல்லாம் தயாராத்தானே இருக்கு, எடுத்து வெச்சு சாப்பிடக்கூடவா தெரியாது.” ஆனால் நீங்கள் நினைத்தே பார்த்திருக்க மாட்டீர்கள்; உங்களது முதுகுக்குப் பின் “என்ன லேட்டானாலும் சரி; நான் பரிமாறாமல் அவர் சாப்பிட்டதே இலலை. அவருக்கு எல்லாமே நான் செஞ்சாத்தான் நடக்கும்.”

கூடுதல் குறைவு இருக்கலாம். மக்கள் மெச்சத் தகுந்ததை மெச்சவே செய்வார்கள்.

அடுத்து -

பொறுப்பாய் ஈடுபாட்டுடன் செயல்படுவேன் என்பதற்கு அர்த்தம் அனைத்துப் பணிகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதோ, யார் எது கேட்டாலும் முடியாது என்று வாக்களிப்பதோ அன்று. அதெல்லாம் சில நாள், சில மாதம், அதிகம் போனால் ஓரிரு ஆண்டுகள் தாங்கும். அதன்பிறகு மனமும் உடலும் சோர்ந்து உங்களது காரியங்களை செய்து கொள்வதற்கே மனம் சுரத்தற்றுப் போகும்.

என்னென்ன காரியங்களில் பங்கெடுக்க முடியும், என்ன செயல்களெல்லாம் உங்களுக்குச் சாத்தியம் என்று தேர்ந்தேடுத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைத் திட்டமிட்டு அவற்றிற்கான பொறுப்பை மேற்கொள்வதே சிறந்தது. இல்லையெனில் மிஞ்சுவது தலைவலி மட்டுமே.

எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுமுன் தீர யோசியுங்கள். அதைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் பொறுப்பேற்றுக் கொண்டு முழு மனதுடன் ஈடுபட்டு நிறைவேற்றுங்கள்.

தினமும் பள்ளிக்கூடம் சென்றால்தான் கல்லூரி, பட்டம் என்று வெளியேற முடியும். மழைக்கு மட்டுமே ஒதுங்கினால்
மட்டுமே ஜலதோஷத்திலிருந்து தப்பலாம்.

னம் மகிழ, தொடருவோம்...

Thanks to : www.inneram.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக