ஞாயிறு, 12 டிசம்பர், 2010

முன்னேறி பார்க்கலாம் -பகுதி 2 - தயக்கம் எனும் நோய்

முன்னேற்றத்துக்கு தேவையான பாசிடிவ் குணங்கள், தேவையற்ற நெகடிவ் குணங்கள் இரண்டும் மாறி, மாறி பார்க்க உள்ளோம்.

முதல் தேவையான "இலக்கு" சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஒரு நெகடிவ் குணம்..!!

நம்மை கீழே இழுக்கும் குணங்களுள் முக்கியமான ஒன்று: தயக்கம்!! ஒவ்வொருவரும் ஏதேனும் ஒன்றை சாதிக்க நினைக்கிறோம் ஆனால் அப்படி சாதிக்க நினைக்கும் விஷயத்திற்காக என்ன முயற்சி எடுக்கிறோம்? " எழுத்தாளராக வேண்டும்" "MBA படிக்க வேண்டும் " இப்படி ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ ஆசைகள்.. ஆனால் அவை எல்லாம் ஆசை என்ற அளவிலேயே உள்ளதே அன்றி அடுத்த நிலை போவதில்லை. காரணம் நமக்குள் உள்ள தயக்கம் தான்.

எனது அனுபவங்கள் சில பகிர்ந்து கொள்கிறேன். இவை சுய விளம்பரதிற்க்காக அல்ல ; பிறர் வாழ்வில் நடந்ததை சொல்வதை விட, எனது வாழ்வில் எனும் போது நம்பக தன்மை அதிகமாக இருக்கும் என்பதால் தான்.

*********
நான் BL & ACS முடித்து விட்டு Company Secretary ஆக வேலை பார்த்து வந்தேன். Finance சம்பந்தமான படிப்பு முடித்தால்தான் carreer-ல் வளர்ச்சி நன்றாக இருக்கும் என சில ஆண்டுகளில் புரிந்தது.ICWA படிக்கலாம் என prospectus வாங்கி விட்டேன். பாடங்கள் பார்க்கும் போது Maths & Statistics இருப்பது தெரிந்து, அவற்றை நிச்சயம் பாஸ் செய்ய முடியாது என மேலே தொடராமல் விட்டு விட்டேன். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஏதாவது படிக்கலாம் என M.Phil சேர்ந்தேன் ( IT Jobs & industry கீழே போய், அனைவருக்கும் வேலை கிடைப்பது சிரமம் ஆனால் கூட ஏதாவது கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து தப்பிச்சுக்கலாம் என்பது ஐடியா.. ம்ம்ம் ).

பணம் எல்லாம் கட்டி M.Phil சேர்ந்த பின் தான் Maths & Statistics இருப்பது தெரிந்தது. சரி இதில் அவை அந்த அளவு கடினமாய் இருக்காது என முடிவு செய்து தொடர்ந்தேன். தேர்வு எழுதி முடிக்கும் போது எனக்கே Maths & Stat-ல் ஒரு ஆர்வம் வந்திருந்தது. இதற்காகவா பயந்து ICWA எடுக்காமல் போனோம்; மறுபடி படிக்கலாம் போல் தோன்றியது. M. Phil தேர்வு முடிவு வந்த அன்று, யுனிவர்சிட்டி சென்று மார்க் ஷீட் வாங்கியவன், வண்டியை அப்படியே திருப்பி ICWA Institute சென்று மீண்டும் ICWA ரிஜிஸ்தர் செய்து விட்டு தான் அலுவலகம் வந்தேன். அடுத்த இரு வருடங்கள் மிகுந்த கடின உழைப்பிலும், என் குடும்பத்தாரின் சப்போர்டாலும் ICWA முடித்தேன். (நான் ICWA சேர்ந்த போது என் பெண் LKG படித்து கொண்டிருந்தாள்!! மனைவியும் வேலைக்கு செல்பவர்; உதவிக்கு வேறு யாரும் கிடையாது; அந்த இரு வருடங்கள் எங்கள் வாழ்வில் மிக கடினமானவை)

இந்த சம்பவத்தில் முதலில் நான் ICWA படிக்க தயங்கியது என் முன்னேற்றத்துக்கு பெரிய தடையாய் இருந்ததை கவனித்திருக்கலாம். பல நேரங்களில் தடைகள், எல்லைகள் இவை நாமாக மனதிற்குள் ஏற்படுத்தி கொள்பவையே. உண்மையில் மனிதன் " என்னால் இது முடியும்; முடியாது" என் தானாக தனக்கு எல்லைகள் ஏற்படுத்தி கொள்கிறான். மனிதனின் திறமைக்கும் சாதிப்பதற்கும் எல்லைகளே இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்க பட்டுள்ளது.

அதே சம்பவத்தில் M.Phil ரிசல்ட் வந்த அன்றே ICWA ரிஜிஸ்தர் செய்த உதாரணம் பாருங்கள். அது தான் தயக்கம் இன்றி செயல் படுவது. அப்படி தயக்கம் இன்றி தைரியமாக செல்லும் போது பெரும்பாலும் வெற்றியை நாம் சந்தித்தே தீருவோம்.

மேலே சொன்ன சம்பவத்தின் தொடர்ச்சியாக இன்னும் கூட சொல்ல ஒன்று உள்ளது. ICWA கடைசி குரூப் படிக்கும் போது Cost Audit என்று ஒரு பேப்பர். இதில் Objective டைப் கேள்விகள் மட்டும் 40 மார்க்குக்கு வரும். புத்தகத்தின் எந்த இடத்திலிருந்தும் வரலாம். நான் இதற்கு அட்டை டு அட்டை Objective type முழுவதுமாக ஒரு நோட்டில் தயார் செய்திருந்தேன். பலரும் இந்த பாடத்தில் கேள்வி, பதில், கணக்குகள் இவற்றில் தான் அதிக கவனம் செலுத்துவர். ஆனால் நான் நாற்பது மார்க்கும் எடுக்க பிளான் செய்து இப்படி தயார் செய்தேன். தேர்வு முடியும் போதே இதனை ஒரு One Word டைப் புத்தகமாக போட்டால் நன்றாக விற்பனை ஆகும் என்று தோன்றியது. நண்பர்களிடம் சொன்ன போது அவசியம் செய்ய சொன்னார்கள். அந்த தேர்வு முடிவு வந்து கோர்ஸும் முடித்து விட்டேன். ஆனால் அந்த புத்தகம்??? வெளியிட படவே இல்லை!! இத்தனைக்கும் மெட்டீரியல் முழுக்க தயார்!!ஒரு பப்ளிஷரை பார்த்து பேசியிருக்க வேண்டும். செய்ய வில்லை. தயக்கம்!! அப்புறம் பார்த்துக்கலாம் என தாமதபடுத்தி விட்டேன்.

ஒரு நல்ல ஐடியா கிடைப்பதே கஷ்டம். அதனை கடைசி வரை (Till a logic conclusion/ closure) கொண்டு செல்ல வேண்டியது அந்த ஐடியா ஓனர் பொறுப்பு. அப்போது தான் அதன் முழு பலனையும் அடைய முடியும்.

இத்தகைய நேரத்தில்/ விஷயத்தில் இன்னொரு பிரச்சனை. இப்படி தாமதம் செய்யும் போது நாம் செய்யணும், செய்யணும் என நினைத்த விஷயத்தை இன்னொருவர் செய்து முடித்து விடும் ஆபத்தும் உள்ளது.

பெரியவர்கள் " நல்ல விஷயத்தை தள்ளி போடாதே; கெட்டது செய்யணுமா அதனை தள்ளி போடு " என்பார்கள். ஒருவருக்கு தானம் செய்ய நினைக்கிறோம்; அதனை விரைவில் செய்வதே நல்லது; இல்லா விட்டால் "வேறு யாராவது செய்யட்டும்; நாம் ஏன் செய்யணும்?" என மனசு நினைக்க ஆரம்பித்து விடும்.

அதே நேரம் ஒருத்தருக்கு கெட்டது செய்யணும் என தோன்றுகிறது: அவர் உங்களுக்கு செய்த தீங்கிற்கு உடனே திரும்ப குடுக்க தோன்றுகிறது. இதனை உடனே செய்ய வேண்டாம். முதலில் தள்ளி போட வேண்டும். சில மாதங்களில் அந்த எண்ணம் வலுவிழந்து விடும். சட்டத்தில் கூட நீண்ட நாள் பகையால் கொலை செய்தவரை நீதி மன்றம் கடுமையாய் பார்க்கிறது; " He was able to sustain such negative emotion for a long period of time" என!

நான் கவனித்த வரை MD மற்றும் CEO-க்கள் அநேகமாய் எதையும் தயக்கம் இன்றி செய்பவர்களாக, பேசுபவர்களாக உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல மிகுந்த தன்னம்பிக்கை உள்ளவர்கள் புதியவர்களிடம் கூட தயக்கம் இன்றி பழகுவதை, கேள்வி கேட்பதை, உதவிகள் வேண்டுவதை பார்த்துள்ளேன். இவர்கள் தான் பெரும்பாலும் வெற்றியாளர்களாக உள்ளனர்.

இன்டர்வியுக்களிலும், குறிப்பாக குருப் டிஸ்கஷன்களிலும் நாம் தயக்கம் இன்றி பேசுகிறோமா என்பது தான் முக்கியமாக கவனிக்கிறார்கள். நாம் சொல்லும் கருத்தை விட சொல்லும் விதம் (Confidence உடன் தயக்கம் இன்றி பேசுதல்) தான் அவற்றில் முக்கிய விஷயமாக கொள்ளபடுகிறது.

ஒரு எழுத்தாளரையோ, பதிவரையோ எடுத்து கொள்ளுங்கள். அவருக்கு இன்ன தான் எழுத வேண்டும் என யாராவது சொல்கிறார்களா என்ன? என்ன தலைப்பு என்பது முதல், என்ன எழுதுவது என்பது வரை தானே யோசித்து தயக்கம் உதறி மேலே செல்கிறார்கள்.

எந்த field-லுமே "Early bird has an advantage" என்பார்கள். தயக்கம் இன்றி, ஒரு முயற்சியை பிறர் துவங்கும் முன், துவக்கத்திலேயே ஆரம்பித்தவர்கள் ஓட்டத்தில் முன்னணியில் இருப்பார்கள்.

"நூறு மைல் பயணம் நீங்கள் முதல் எடுத்து வைக்கும் முதல் அடியில் தொடங்குகிறது" என்று ஒரு பழமொழி உண்டு. எத்தனை அர்த்தமுள்ள பழமொழி!!

சில வேலைகளை துவங்கும் போது அதனை முழுமையாய் எப்படி செய்து முடிப்பது என்பது குறித்த ஒரு தெளிவான ஐடியா இல்லாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து போக போக அதனை எப்படி முடிப்பது என்ற தெளிவு வந்து விடும். மேலும் இது சம்பந்தமான மனிதர்களை நீங்கள் சந்திப்பது இயல்பாய் நடக்கும். அவர்கள் அதனை எப்படி முடிப்பது என்ற யோசனையும், உதவியும் செய்வார்கள். எல்லா வேலைகளும் (குறிப்பாய் இது வரை ஈடுபடாத புது வேலைகள்) இப்படி தான் முடிகிறது.

நீங்கள் இது வரை போகாத ஒரு இடத்திற்கு புதிதாய் செல்கிறீர்கள்; அப்போது ஆரம்பம் முதல் கடைசி வரை எந்த வழியாக போவது என முழுதும் தெரிந்தால் தான் போவேன் என்றால் அது நடக்கிற காரியமா என்ன? பயணத்தை துவங்கி விட்டால், போக போக யாரிடமாவது வழி கேட்டு, கேட்டு சென்று விடுகிறோம் தானே? வாழ்க்கையில் நாம் செய்யும் பல புது விஷயங்களும் இதே போல் தான்!!

நான் ஒரு ப்ளாக் துவங்கவே ஓரிரு வருடம் யோசித்து, தொடர்ந்து எழுத என்ன இருக்கு என்று தான் தயங்கினேன், ஆனால் எழுத துவங்கிய பின் அனைத்தும் இயல்பாய் நடக்கிறது. எழுத துவங்கிய பின் தான் தமிழ் மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகள், Followers gadget போன்றவை இது வரை சந்திக்காத புது நண்பர்கள் அறிமுகம் செய்தனர்.

பண உதவி கேட்டால் தான் மனிதர்கள் பலர் செய்ய தயங்குவர். பணம் தவிர மற்ற உதவிகள், குறிப்பாய் அவர்களுக்கு தெரிந்த ஒன்றை எப்படி செய்வது என நீங்கள் கேட்டால், சொல்லி தர பலரும் தயங்குவது இல்லை. அப்படி சொல்லி தருவதில் கிடைக்கும் திருப்திக்காக பலரும் அந்த உதவிகள் செய்யவே செய்கின்றனர்.

**அன்பு காட்ட தயங்காதீர்கள். ஒவ்வொரு இதயமும் அன்பிற்காக ஏங்குகிறது.

** நன்றி சொல்ல தயங்காதீர்கள். உதவி செய்தவருக்கு நீங்கள் செய்யும் மிக குறைந்த மரியாதை அது.

** பாராட்ட தயங்காதீர்கள். மனிதர்களுக்குள் இருக்கும் குழந்தை பாராட்டுக்காக ஏங்குகிறது.


மேலும் முன்னேறுவோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக